Friday, January 6, 2012

நான் யார் ..!

இக்கேள்விக்கு விடை கூற முயலும் யாரும் முடிவில் ஆத்ம விசாரனையில் இறங்கித்தான் ஆகவேண்டும். இந்த உடம்பு ‘நான் ஆக முடியாது. முதல் காரணம் இது ‘என் உடம்பு என்கிறோம். ‘என் உடம்பு, ‘என் கண், ‘என் காது, ‘என் ருசி, ‘என் வாசனை – என்றெல்லாம் சொல்லப்படுவதின் உட்பொருளே, நம் உடம்போ, கண், காது, கை, கால் முதலிய புலனுறுப்புகளோ, ஓசை, பார்வை முதலிய உட்புலன்களோ, ஏன், எண்ணங்கள் தோன்றி மறைவதற்கு இருப்பிடமான மனதோ ‘நாம் இல்லை என்பதுதான். மனது தூங்கும்போதும் ‘நாம்’ இருக்கிறோம். அதனால் மனதோ புத்தியோ ‘நாம் இல்லை. ‘நான், நான் என்று மனது உள்ளபோதுதான் நாம் இருப்பதை நம்மால் தெரிந்து சொல்லிக் கொள்ள முடிகின்றதென்றாலும், மனது இல்லாத போதுங்கூட நாம் இருந்துகொண்டு தானிருக்கிறோம். மனதை வைத்துத்தான் எல்லா எண்ணங்களும் உணர்வும் உண்டாகின்றன. மனது இல்லாதபோது நாம் செயலியலற்ற ஜடமாகக் கருதப்படுகிறோம். அதனால்தான் மனதையே ‘நாம் என்று நினைக்கத் தோன்றுகிறது. ஆனால் மனது இல்லாமலும் நம்மை ஜடமாகவோ எப்படியோ உயிரோடு இருக்கச்செய்யும் உயிர்த்தத்துவம் தான் அந்த ஆன்மா. மனது இல்லாமலும் அது இருக்கும். ஆனால் அது இல்லாமல் மனது இருக்காது. அது தான் உண்மையான 'நான்'....!

No comments:

Post a Comment